Monday, 22 October 2012

இந்தியாவில்…!



இந்தியாவில்..
நெற்றியில் நீங்கள் திலகமணிந்திருந்தால்
உங்களை யொருவரும் “நீங்கள் தமிழரா” எனக் கேட்பதில்லை.

நீங்கள் அணிந்திருக்கும் “பொட்டு” அவர்களைக் கலவரப்படுத்துவதில்லை.
அவர்களை அது அசௌகரியமடையச் செய்வதில்லை.

கூந்தலில் மலர்களைச் சூடிக்கொள்ளலாம்.
வெண்ரோசா, அலரி, மல்லிகை எதுவும்
வாசம் வீசலாம் உங்கள் கூந்தலில்….

மூக்குத்தியணிந்த பெண்களும்
காதணியணிந்த ஆண்களும்
மூக்கின் நடுவில் துளையிட்டு வளையம் தொங்கினும்
கழிசடைகளல்ல இங்கே.
கால்களில் சலங்கையணிதல் வழமையிங்கே.

இந்தியாவில் மக்கள் அதிர்ச்சியடைவது இவற்றினாலல்ல.
அவர்கள் அதிர்சியடைவது வேறு விடையங்களுக்கு:-
இரண்டு அல்லது மூன்று உள்ளூர் மொழிகளை மக்கள் அறிந்திருப்பது மிகச் சாதாரணமாக 
இருக்கும் ஒரு நாட்டில்
தமிழ்பேசத் தெரியாது என்னை நான் இலங்கையாள் என்ற போது…

பல்லினங்கள் வாழும் நாட்டில் பிறந்து வாழுமெனக்கு
இந்நாட்டின் இரு மொழிகளில் ஒன்று மட்டுமே தெரியும்.
எனக்கு நெற்றியில் திலகமிட முடியும்
கூந்தலில் பூச்சூட முடியும்
காலில் சலங்கை அணியமுடியும்
ஆனால் தமிழ்பேச முடியாது…

மூலம்: சுபா விஜேயஸ்ரீவர்த்தன (SubhaWijesiriwardena)
நன்றி:http://blogsmw.wordpress.com/2012/09/02/in-india/
மொழிபெயர்ப்பு: தேவஅபிரா

Wednesday, 5 September 2012

அவன் சாவில் பங்கு கேட்கிறாள் கிழவி! காசி ஆனந்தன் நறுக்குகள்


ஈழத்தின் புகழ் பூத்த கவிஞர்களில் ஒருவர் காசி ஆனந்தன். 

இவரது நறுக்குகள் இரண்டாம் தொகுப்பு என்ற கவிதைப் புத்தகத்தில் இருந்து சில கவிதைகள் உங்களுக்காக... 


பங்கு
எதிரிக்குத் தெரியாமல்
சோறு போடுகிறாள்
கிழவி
போராளிக்கு...

நினைக்கலாம்
நீ
அவனுக்கு
அவள்
உயிரூட்டுவதாய்
இல்லை...

அவன்
சாவில்
பங்கு
கேட்கிறாள்
கிழவி...

கூடு
சொந்த வீடு
கட்டுகிறது
குருவி...

நான்
குடியிருக்கும்
வாடகை வீட்டில்.

உறுத்தல்
நேசிக்கிறேன்
எங்கள் மண்ணின்
பறவைகளை
எங்களிலும் கூடுதலாய்...

எங்கள் மண்ணை நேசிப்பதால்

எதிரி
குண்டு வீச்சில்
எங்கள் காடுகள்
எரிந்தும்
வெளிநாடு நோக்கி
விரியாத சிறகுகள்...



Friday, 17 August 2012

'என் காலத்தில் இருந்த தமிழ்ப் பேராசிரியர்கள் போல் இப்போது இல்லை’ என்கிறார் என் ஆசிரியர். உண்மையா?


பேராசிரியர் சி.இலக்குவனார் இருந்தார். பேராசிரியர்களுக்கெல்லாம் பெரும் பேராசிரியர்.

அண்ணா அமெரிக்கா சென்றபோது யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கும் போப்பாண்ட வருக்கும் கொடுப்பதற்காக இலக்குவனாரின் தொல்காப்பிய மொழிபெயர்ப்பைத்தான் கொண்டு சென்றார்.

தமிழ்நாட்டில் 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது இலக்குவனார், மதுரை தியாகராயர் கல்லூரிப் பேராசிரியர்.

போராட்டத்தை இவர்தான் தூண்டிவிட்டார் என்று கைது செய்து தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தது அரசு.

'இந்தி எதிர்ப்புப் போரை நிறுத்தும் விசை, மதுரைப் பேராசிரியரிடம் உள்ளது’ என்று அப்போது அண்ணாவே பகிரங்கமாக அறிவித்தார்.

தி.மு.க. ஆட்சி வந்ததும் மாநிலக் கல்லூரியில் இலக்குவனாரை அமர்த்தினார் அண்ணா. அதன் பிறகும் அமைதியாகிவிடவில்லை இலக்குவனார்.

அன்றைய நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் ஆங்கிலத்துக்கு ஆதரவாக கோவை கருத்தரங்கில் பேச 'தமிழின் நாவலரா? ஆங்கிலத்தின் காவலரா?’ என்று பகிரங்கமாக எழுந்து கேட்டவர் அவர். 

1960-களின் இறுதியிலும் 70-களின் தொடக்கத்திலும் 'பேராசிரியரின் மாணவர்’ என்று பலரும் பெருமிதத்துடன் சொல்லிக்கொள்ளும் தகுதி படைத்தவராக இலக்குவனார் இருந்தார்.

தமிழ்ப் புலமையும், துணிச்சலும் ஒருங்கே பெற்ற தமிழ்ப் பேராசிரியர்கள் குறைந்து வருவதைச் சொல்லி இருப்பார் உங்கள் ஆசிரியர்!

Thursday, 19 July 2012

ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு?


தெற்கு ரயில்வேயில் ஒரு குமாஸ்தா அந்த இளைஞர். சினிமாவில் நடிக்க ஒரு சின்ன  சந்தர்ப்பம் கிடைத்தால், பிரமாதப்படுத்திவிடலாம் என்ற கனவுடன் இருந்தார். 

அந்தச் சமயம், ஒரு நாடகத்தில் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் மேடையில் தோன்றி நடிக்க சிறிய சந்தர்ப்பம் கிடைத்தது. 

வயிற்று வலியால் துடிக்கும் ஒரு நோயாளியாக நடிக்க வேண்டும். நாடகத்தில் அந்தக் காட்சியும் வந்தது. 

மேடையில் காலடி எடுத்தவைத்த முதல் கணத்திலேயே 'ஐயையோ டாக்டர்... வலிக்குதே... வயிறு வலிக்குதே’ என்று அந்த இளைஞர் துடித்த துடிப்பு ஒட்டுமொத்த அரங்கத்தையும் குபுக்கெனச் சிரிக்க வைத்தது. 

அப்போது மேடையில் இருந்த வேறு எவர் மீதும் கவனத்தைப் பதியவிடாமல், 'வயிற்று வலிக்காரனை’ மட்டுமே ரசிக்கவைத்தார் அந்த இளைஞர். 

இத்தனைக்கும் கதைப் போக்கில் எந்த மாற்றத்தையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தக்கூடிய பாத்திரம் இல்லை அது. 

ஆனால், நாடகம் முடிந்ததும் அந்த 'வயிற்று வலிக்காரன்’ மட்டுமே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தான். 

நாடகத்தை ரசித்த எம்.ஜி.ஆர். கையால் 'சிறந்த நடிகருக்கான’ முதல் பரிசையும் வென்றான் அவன். 

கிடைத்த சின்ன சந்தர்ப்பத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு தமிழ் சினிமாவையே கட்டிப் போட்ட அந்த இளைஞன்தான்.... 'நாகேஷ்’ என்றழைக்கப்பட்ட நாகேஸ்வரன்!

Saturday, 30 June 2012

தமிழக முகாம்களில் பரிதவிக்கும் ஈழத் தமிழர்கள்! ஒரு நேரடி விசிட்

தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதி முகாம் ஒன்றுக்குள் வெளியாட்கள் நுழைவது என்பது மிகக் கொடுமையானது. அதையும் மீறிய நுழைவு என்பது பல கட்ட பலத்த பாதுகாப்புக்கும் மனதை புண்படுத்தும் விசாரணைகளுக்கும் உட்பட்டது.

கட்டுநாயக்காவில் நுழைந்த கரும்புலி வீரனின் மனநிலைக்கு ஒப்பானது. இவற்றையும் தாண்டி முகாம்களுக்குள் நுழைந்தால் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழர்களிடம் நான்கு கேள்வி கேட்க பழக முடியாது… புகைப்படம் எடுக்க முடியாது….

இப்படியாக நவீனத்துவமான வதை முகாம்கள் தான் தமிழகத்திலுள்ள ஈழத்தமிழர் அகதி முகாம்கள்.

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள உச்சம்பட்டி ஈழத்தமிழர்கள் அகதி முகாம் ஒன்றுக்கு அண்மையில் சென்றோம்.

மதுரையில் உள்ள மூன்று முகாம்களிலேயே பெரிய முகாமாக இது காணப்படுகின்றது. இங்கு 600 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அகதிகளாக உள்ளனர்.

இவர்கள் அனைவரும் 1990 ஆம் ஆண்டே தமிழகத்துக்கு அகதியாக வந்தவர்கள்… ஆனால் சாக்கடை ஓடும் இடத்துக்கு அருகில் உள்ள சின்னம் சிறு ஓலைக் குடிசைகளில் தான் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

முகாம் வாசலில் தமிழக விசேட பொலிஸ் பிரிவான கியூ பிரிவு பொலிசாரின் அலுவலகம் காணப்படுகின்றது.

அதற்கு வலது பக்கமாக கொஞ்சம் தள்ளி ஈழத் தமிழ் அகதி ஒருவரினால் நடத்தப்படும் தேநீர், சிற்றுண்டிக் கடை ஒன்றும் காணப்படுகின்றது. நாங்கள் மெதுவாக தேநீர் குடிக்கச் செல்வது போல தேநீர் கடைக்குச் சென்றோம்..

அங்கு வயதான ஐயா ஒருவர் இருந்தார்.. நாங்கள் அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்…

ஐயா இலங்கையில எந்த இடம்? “நான் தம்பி வவுனியா… 90 இல அகதியாக தமிழ்நாட்டுக்கு வந்தனாங்கள்… இப்ப வரை இங்க தான் இருக்கிறோம்… இலங்கையில இப்ப சமாதானம் என்று சொல்லுறாங்கள்… ஆனால் எங்களுக்கு அங்க போக விருப்பம் இல்லை… ஏதோ கிறிஸ் மனிதன் என்றும் பயமுறுத்துறாங்கள்.. என்று தனது ஆதங்கத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.. ”

அடுத்ததாக ஐயாவிடம் அம்மா புதுசா அறிவிச்ச திட்டங்கள் உதவிகள் கிடைச்சுதோ? முகாமில எப்படி வசதிகள் இருக்கு..?? என்று கேட்டோம்.. “இல்லை தம்பி… ஈழத் தமிழர்களுக்கு உதவிய கடவுள் தங்கத் தாரகை எங்கள் அம்மா என்று எல்லாம் பேப்பரில பக்கம் பக்கமாக விளம்பரங்கள் வந்து நான்கு மாசத்துக்கு மேல ஆகுது… ஆனா கூடுதலாக எந்த உதவிகளும் கிடைக்கல…

முகாமில எங்களுக்கு நாத்தத்துக்க இருந்து பழகிப் போச்சு… இப்பவும் கொட்டில் வீட்டில தான் வாழுறோம்…முகாம் பொறுப்பதிகாரி வரும் நாட்களில் முகாமிலிருந்து யாரும் வெளியில் செல்ல முடியாது… ”

தம்பி இப்ப கொஞ்சத்தில வந்திடுவாங்கள் கியூ பிராஞ்… அவங்கள் உங்களை யார் என்று கேட்டு எங்களை நோண்டி எடுப்பார்கள்… அதுக்கு முதலில வெளிக்கிடுங்கோ என்று அவசரம் காட்டினார் அந்த பெரியவர்.. அவரின் கோரிக்கையை ஏற்று அங்கு இன்னும் சிறிது நேரம் நின்றால் எங்களுக்கும் ஆப்பு தான் என்ற நிலையில் திரும்பினோம்…

முகாமில் ஒருவரைச் சந்திக்கச் சென்றால் கியூ பிராஞ்சுக்கு அவரின் பூர்வீகம், தொழில், விசா, பாஸ்போர்ட் போன்ற தனிப்பட்ட விடயங்களை துளாவும் அருகதை இல்லையே….

தனி மனித சுதந்திரத்தை மீறிய செயலாகவே இது பார்க்கப்படுகின்றது. சில பொலிஸ்காரர்கள் பிச்சை எடுக்கும் பெருமாளிடம் பிடுங்கித் தின்னும் அனுமார் கணக்காக அவர்களிடம் உள்ள காசையும் பிடுங்குகிறார்கள்..

உண்மையில் திறந்த வெளிச் சிறைச்சாலையாக தான் தமிழக அகதி முகாம்கள் உள்ளன என்பது நிதர்சனமானது…

அங்கு வெளியாட்கள் பெரிதாக போக முடியாது.. அதுவும் பத்திரிகை, மீடியாக்களைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அனுமதி இல்லை… அங்கு புகைப்படங்கள் எடுக்க முடியாது…

இப்படியாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் தனித் தீவாக முகாம்கள் மாற்றப்படுள்ளன. அங்குள்ள சிறுவர்களின் எதிர்காலம் தான் உண்மையில் கவலை கொள்ள வைக்கின்றது.

நம்மூர்களில் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் தரவை வெளியில் உள்ள சுடுகாடுகளைப் போன்று காணப்படுகின்றன தமிழக முகாம்கள்..

முகாம்களைச் சுற்றி காடு போல் பற்றைகள் வளர்ந்து காணப்படுகின்றன….

முகாம்களுக்கு இடையில் சிற்றாறு போல குறுக்கு மறுக்காக கழிவு நீர் பாய்ந்து செல்கின்றது.. சில இடங்களில் தேங்கியும் உள்ளது… இவை நாளடைவில் பாரிய சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை…

இவ்வாறு பல்வேறு உளவியல், உடலியல் தாக்கங்களுக்கு மக்கள் உள்ளாகின்றனர்.

மெக்கானிக் வேலையிலிருந்து இந்திய எஜமானார்களின் கக்கூசு கழுவுகிற வேலைகள் வரை கஸ்ரமான பொருளாதார நிலை காரணமாக முகாமில் வாழும் ஈழத்தமிழ் மக்கள் செய்து வருகின்றார்கள்.

இந்தியாவில் இருந்து கொண்டு தமிழீழம் கிடைக்க அரும்பாடுபட்டு வரும் வெத்து வேட்டுக் கட்சிகள் கொஞ்சம் உங்களை நம்பி வந்தவர்களின் கொட்டில்களையும் அவர்களின் சீரழிந்த வாழ்க்கையையும் போய் பார்க்கலாமே…

கடைசி அவர்களுக்காவது உதவலாமே..

தமிழக முகாம்களோடு ஒப்பிடுகையில் வன்னி முகாம்கள் எவ்வளவோ மேல் எனத் தோன்றுகிறது…

Tuesday, 29 May 2012

உயில்மொழி...!


என்னுயிர்
பிரியும் வேளையில்
தலைமாட்டிலும்
கால்மாட்டிலும்
நின்றவர்கள்
நீங்கள்தானா?

இமைகளை
மூடிவிட்டது
எந்த விரல்கள்?

நாடிக் கட்டுக்காய்
கிழிக்கப்பட்ட துணி
எவருடையது?

அசுத்தங்கள் நீக்கி
என் பிரேதத்தைக்
குளிப்பாட்டி
கபன் பொதிந்தவர்கள்
யாரெல்லாம்?

வியர்வை சிந்த
எனக்கான
கபர் குழியை
வெட்டியவர்கள் எவர்?

என் ஜனாஸாவைச்
சுமந்து சென்ற
தோள்கள்
எவருடையவை?

என் பிரிவிற்காய்
கண்ணீர் வழிந்த
கன்னங்கள் எத்தனை?

என் வாழ்காலத்தில்
உங்களைக் கடக்க நேர்ந்த
பொழுதுகளில்
உங்களுக்காகப்
புன்னகைத்திருக்கின்றேனா
நான்?


-வி.எஸ்.முஹம்மது அமீன்-
ஆனந்த விகடன்
25.04.2012

Friday, 18 May 2012

மாற்றங்கள்...!



பிரகாரம் நுழைந்தவுடன்
கனியாகி விடுகிறது எலுமிச்சை...
தீர்த்தமாகி விடுகிறது தண்ணீர்...
பிரசாதமாகி விடுகிறது
திருநீரும் பொட்டும்...
 எந்த மாற்றமுமின்றி
வெளியேறுகிறான் பக்தன்.
 -புன்னகை சேது-


விற்ற காசு

தோப்பும் துரவும் வீடும் கிணறும் 
விற்று வாங்கிய தொகையை 
எண்ணிக்கொண்டிருக்கையில்
ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள்
அனைத்திலும் அப்பாவின் முகம்.
-ந.கண்ணன்- 
 (17.11.2002 அன்று விகடனில் வெளியாகிய இரு கவிதைகள்)

Sunday, 1 April 2012

பசுமை நினைவுகள்..!


அன்புள்ள
நண்பனுக்கு,

நீயனுப்பிய துண்டு மடல் கிடைத்தது.
மகிழ்ச்சி.
நீ தமிழை மறக்காததையும் நினைத்து.

ஊர் புதினம் கேட்டு எழுதியிருந்தாய்.

பேச்சுவார்த்தை போலவே இங்கு
எதுவுமே நடக்கவில்லை

கொந்தல் மாங்காய் பிடுங்க நாங்கள்
கொக்கத்தடி களவெடுத்த
குமரேசன் பேர்த்தி பிரியாவுக்கு
போன வாரம் கலியாணம்.
கை நிறையக் காசோடு
பறந்து வந்த கனடாக் கணவன்
கொத்திக் கொண்டு போனான்.

வாசிக சாலை‘அமைச்சரவையில்’மாற்றம்
தண்ணீர்ப்ப்பந்தல் போட்ட காசில்
தண்ணி காட்டிப் போட்டார் எண்டு
பேரம்பலத்தாரைத் தூக்கியாச்சு

உனக்காக உன்னுடன் சேர்ந்து
நானும் கலைச்சுத் திரிந்த
பர்வதம் மகள் மைதிலி
இன்னும் காத்திருக்கிறாள்
றெஜீஸ்டர் பண்ணீட்டுப் போன
ஜேர்மன் மாப்பிள்ளை பார்த்து

தூக்குக் காவடியில் தொங்கும் போது
றோட்டோரம் நின்று சிரித்து
சிக்னல் கொடுத்த கலாவையே
எங்கட’புட்போல்’ கண்ணன்
கடைசியில கை பிடிச்சிட்டான்

கனகற்ற வளவுக்கு
சுத்து மதில் அடிச்சதால
எங்கட கிறிக்கெற் கோஷ்டி இப்ப
பள்ளிக்கூட வளவுக்கு
இடம்பெயர்ந்திட்டுது.

வழமை போலவே
வள்ளியரிண்ட வளவு
பங்குப்புளி உலுப்பும் போது
இம்முறையும் நல்ல சண்டை
ஊர் கூடி வேடிக்கை
இரண்டு பேரையும் பொலிஸ்
தூக்கிப் போச்சுது

நாங்கள் ஊமைக் கொட்டையால
எறிஞ்சு கால் முறிச்ச
கிடா மறி எல்லாத்தையும் வித்திட்டு
வடிவக்கான்ர வளவு வாங்கினதோட
இரண்டு மாட்டையும் வாங்கி விட்டிருக்கிறார்
குமார லிங்கத்தார்.

இறைப்புக்கு இஞ்சின் விட்டு
பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த தருமர்
மறைப்புக்கு மதில் கட்டிற அளவுக்கு
ரெண்டு பெடியளையும் சுவிஸுக்கு அனுப்பீட்டார்

முந்திப் பார்த்தா
மூஞ்சியைத் திருப்பிற பத்மா
இப்ப சாதுவா சிரிச்சிட்டுப் போகுது
புருசனோடு போகும் போது.

வேலியே பத்தி விடுமளவுக்கு
வேகிற வெய்யில்
வேறெ என்ன சொல்ல?

அலாரம் வைத்தெழும்பும்
அவதியான நாடெண்டாலும்
அடிக்கடி கடிதம் போடு
நீ வந்து போன சந்தோசம் வருமெனக்கு.

இப்படிக்கு,
இன்னும் இங்குள்ளவன்...

(அருமையான கவிதையைப் படைத்த நண்பனுக்கு நன்றிகள்...)

Thursday, 15 March 2012

என்னுடைய பேரனுக்காய் எவன் வைப்பான் பழத்தோட்டம்?


"யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பொண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ்நாட்டில் என் அம்மா
சுற்றம் ப்ராங்க்போர்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ வழி தவறி
அலாஸ்கா வந்துவிட்ட
ஒட்டகம் போல் ஒஸ்லோவில்,

என்ன நம் குடும்பங்கள்
காற்றில் விதிக் குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையணையா?

பாட்டனார் பண்படுத்தி
பழமரங்கள் நாட்டி வைத்த
தோப்பை அழிய விட்டு
தொலைதேசம் வந்தவன் நான்
என்னுடைய பேரனுக்காய்
எவன் வைப்பான் பழத்தோட்டம்?"

(நிகழ்கால வாழ்க்கையும் உறுதி இல்லாமல் போவதைப் போல எதிர்காலம் குறித்த நிச்சயமின்மை தொடரும் புலம்பெயர் வாழ்வின் துயரங்களை வெளிப்படுத்தும் ஈழக் கவிஞரான வா.ஐ.ச ஜெயபாலனின் கவிதை)

Saturday, 4 February 2012

இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களுக்கு ஒரு கேடா!


அது ஒரு காலம்... இலங்கையில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி இராஜ்ஜியம் இருந்தது... அதை இலங்கையின் வழிவந்த தமிழ் மன்னர்கள் வெற்றிகரமாக ஆண்டு கொண்டிருந்தார்கள்.

வணிக நோக்கோடு அங்குள்ள வளங்களைச் சுரண்டும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், ஆங்கிலேயர்கள் முறையே இலங்கைக்கு வருகை தந்தனர்.

அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்த தமிழ் மன்னராட்சி மிகப்பெரிய இடையூறாக இருந்தது.

இதனால் அவர்கள் எவ்வளவோ முயற்சித்து தமிழ் இராஜ்ஜியத்தை இல்லாமல் செய்தார்கள்.

அதிலும் ஆங்கிலேயர்கள் இலங்கையை இலகுவாக நிர்வகிக்கும் பொருட்டு எல்லா இராச்சியங்களையும் ஒன்றாக இணைத்து சிறிலங்கா எனும் பெயரில் ஆளத் தொடங்கினார்கள். அது தான் இன்றைய இலங்கை.

ஆனால் உண்மையில் நாங்கள் பார்க்கப் போனால் இலங்கையில் ஒரு தமிழ் இராஜ்ஜியம் தமிழ் மக்கள் தங்கள் சொந்த நிலத்திலே, சொந்தக் கொடியின் கீழ், சொந்த ஆளுகையின் கீழ் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை இருந்தார்கள் என்பது தான் வரலாறு.

1948 ஆம் ஆண்டு பெப்ரவரி நான்காம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்தது.

இலங்கை சுதந்திரம் அடைந்தது என்றால் அப்போதைய இலங்கையில் இருந்த இரண்டு மிகப்பெரிய இனக்குழுக்களுக்குள்ளே பெரும்பான்மை இனக்குழுவான சிங்களவர்களுக்கு மட்டும் ஆங்கிலேயர்கள் அதிகாரங்களை வழங்கி விட்டுச் சென்றமை ஆகும்.

மிகச் சரியாகச் சொல்லப் போனால் ஆங்கிலேயர்கள் இலங்கைத் தமிழருக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டுப் போன நாள் தான் பெப்ரவரி நான்காம் திகதி.

ஆட்சியைப் பகிர்ந்தளிக்காமல் அன்று ஆங்கிலேயர் விட்ட மாபெரும் தவறானது ஈழம் கொழுந்து விட்டு எரிவதற்கு வழி கோலியது.

அந்தக் கோரத்தின் தொடர்ச்சி தான் ஏறத்தாழ ஆறு இலட்சம் மக்களையும் ஒரு வலுவுள்ள இளைய சந்ததியினையும் கொடூரமாக அழித்து விட்டுச் சென்று விட்டது.

இலங்கையின் 64 அவது சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக்கொண்டிருக்கின்ற நண்பர்கள் தயவு செய்து நீங்கள் கடந்து வந்த வரலாற்றுப் பாதையினைச் சற்றுத் திரும்பிப் பாருங்கள்.

நாங்கள் தனி இராச்சியமாக இருந்தோம். எங்களுக்கு என்று தனி நாடு இருந்தது. எங்களுக்கு என்று தனிப்படை இருந்தது.

அந்தப் படைகளுக்கு எல்லாம் ஆப்பு வைத்து முற்று முழுதாக தமிழ் இராஜ்ஜியத்தையே இல்லாமல் செய்த நாள் தான் 1948 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம், நான்காம் திகதி.

இது உண்மையில் எமது சுதந்திர தினம் அல்ல.. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரைக்கும் இது ஒரு அடிமைத் தனத்துக்கு வித்திட்ட ஆரம்ப நாள்.

இதை மகிழ்ச்சியாகக் கொண்டாடாடிக்கொண்டிருக்கின்ற எனதருமை தமிழ் சகோதரர்களே நீங்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆண்ட மண்ணை நாங்கள் மீளவும் ஆள்வதற்காக நீதியான முறையிலே நாங்கள் ஆரம்பித்த போராட்டம் எங்களுடைய தவறுகளினாலும் நாம் எமது போராட்டத்தின் நீதியை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லாத காரணத்தாலும் அது படு தோல்வியில் முடிவடைந்தது. நீங்கள் அனைவரும் அறிந்ததே.

இன்றைய சுதந்திர தின நிகழ்வில் சிங்களப் படைத்தளபதிகள் புடை சூழ இறுமாப்பில் அமர்ந்திருக்கும் மஹிந்தர்...!


சுதந்திரத்துக்கான போராட்டம் என்பது தனியே விடுதலைப் புலிகள் மாத்திரம் ஆரம்பிக்கவில்லை.. 80 களில் இருந்த அத்தனை இளைஞர்களும் விடுதலைக்காகப் போராடினார்கள்.

வெவ்வேறு தமிழர் போராட்டக் குழுக்களில் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.

பின்பு அந்தப் போராட்டமானது வலியது பிழைத்துக் கொள்ளும் என்ற கொள்கைக்கு இணங்க இறுதியில் புலிகள் அதனை முன்னிலைப்படுத்திப் போராடினார்கள். ஆனால் இறுதியில் சர்வதேசம் செய்த சூழ்ச்சியினாலும் நாங்கள் செய்த சில தவறுகளாலும் போராட்டம் படுதோல்வியைத் தழுவியது.

இதனால் நாங்கள் அடைய வேண்டி இருந்த உண்மையான இலக்கு அதாவது நாங்கள் 1800 களில் ஆண்டு கொண்டிருந்த உண்மையான தமிழ் இராஜ்ஜியத்தை மீண்டும் அடைவதற்கான முயற்சிகள் எல்லாம் சுக்கு நூறாகிப் போய்விட்ட நிலை கவலைக்குரியது.

எத்தனை நூற்றாண்டு சென்றாலும் புலிகளால் முன்னெடுக்கப்பட்டது போன்ற மாபெரும் போராட்டம் ஒன்று இனி வருங்காலங்களில் சாத்தியம் இல்லை என்பது என்னுடைய கருத்து.

நாங்கள் இனி சிங்களவர்களுக்கு அடிமையாக இருந்து கொண்டு அவர்கள் கொண்டாடும் சுதந்திரதினத்தை எங்களுடையது என எண்ணி புழுகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டிய கேவலமான நிலைக்கு நானும் நீங்களும் தள்ளப்பட்டுள்ளோம்.

ஆனால் நாங்கள் இந்த நிலையில் இருந்து மீளலாம்..

அப்படி மீள்வதற்கு நாம் எமது சமூகத்தை கல்வியால், பொருளாதாரத்தால், தமிழ் மக்களின் அடிப்படைக் கட்டமைப்புக்களில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டுபண்ணி வருவோமானால் எங்களுக்கு சாத்தியம் இல்லாமல் போன ஈழம் என்றோ ஒருநாள் சாத்தியமாகும் என்பதில் ஐயமில்லை.

வெள்ளையர்கள் எமக்கென்று நீதியான இராஜ்ஜியத்தை வழங்காமல் சூழ்ச்சியினால் சிங்களவர்களுக்கு தாரை வார்க்கப்பட்டதன் காரணத்தினால் எங்களுடைய எண்ணற்ற இளைஞர்கள் கொல்லப்பட்டனர், எண்ணிக்கையற்ற பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், அதற்கும் மேலாக மாபெரும் இனபடுகொலை அரங்கேறியது.

அதிலும் உச்சக்கட்டமாக ஒரே நாளில் 40000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு ஒரேயடியாக மண்ணில் புதைக்கப்பட்டனர். அதிலுள்ள சோகம் என்னவென்றால் முள்ளிவாய்க்காலில் தமிழர்களை நயவஞ்சகமாக கொன்று வெற்றி வாகை சூடிய நாளாக சுதந்திர தினத்தைப் சிங்களப் பேரினவாதிகள் பார்க்கின்றமை தான்.


இவ்வளவையும் தாங்கிக் கொண்டு இன்னமும் நாங்கள் மனிதர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கின்ற வேளையிலே எம்மைப் பார்த்து தங்களுடைய சுதந்திர தினத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்று அரசோ அவர்களின் அடிவருடிகளோ அழைப்பது எவ்வளவு ஒரு கேவலமான விடயம் என்பதை வாசிக்கின்ற நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..

நாங்கள் என்றுமே இலங்கையை ஒரு நாடு என்று ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றோம். ஏனென்றால் நாங்கள் எமது நீதியான தனி நாட்டுக்காக ஏறத்தாள ஆறு இலட்சம் தமிழ் மக்களைப் பலி கொடுத்து விட்டோம்.

இவ்வளவு உயிர்களையும் இழந்து விட்டு சிறிலங்காவின் சுதந்திர தினத்தன்று எலும்புக்காக திரிகின்ற நாய் போல நீங்கள் தரப்போகின்ற சலுகைக்காக எமது மானத்தை எல்லாம் அடகு வைத்துவிட்டு நாம் இலங்கையர் என்று சொக்கலேட் கொடுத்துக் கொண்டு திரிய வேண்டுமென சிலர் எதிர்பார்ப்பதை நினைக்கையில் எனக்கு சத்தியமாக இரத்தக் கண்ணீர் வருகின்றது.

இன்றைக்கு சுமார் 64 வருடங்களுக்கு முன்னர் தான் அடிமை வாழ்க்கைக்கு எம்மைத் தயார்ப் படுத்திக் கொண்டோம், எம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டோம்.

நாம் எம்மை ஆண்டுகொண்டிருந்த காலங்களை விட்டுவிட்டு சிங்களப் பேரினவாதிகளின் கீழ் ஆளப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நாள் என்னைப் பொறுத்தவரை இது ஒரு துக்க நாள்...

இலங்கையின் 64 ஆவது சுதந்திர தினமான இன்றைய தினம் எடுக்கப்பட்டு நீங்கள் கீழே பார்க்கின்ற படங்களில் காணப்படுகின்ற எல்லோருமே சிங்களவர்கள் தான்...

Wednesday, 18 January 2012

எப்படி இருக்கிறது அண்ணா நூலகம்? ஒரு நேரடி விசிட்

வெயில் குறைந்த அழகான மாலை நேரம் 4 .35 மணி... கிண்டியிலிருந்து 21 G என்ற பஸ்ஸில் ஏறி கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூலகத்துக்கு ரிக்கற் எடுத்தோம். கிண்டியிலிருந்து மூன்றாவது பேரூந்து நிறுத்தம் என்றார் கண்டெக்டர்.

பஸ் வளைந்து நெளிந்து அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி சிறுவர் பூங்காவைத் தாண்டி சென்று கொண்டிருந்தது. வீதியைப் பார்த்துக் கொண்டே போகும் போது இடதுபக்கத்தில் கம்பீரமாக காட்சியளித்து அந்த அறிவுச் சுரங்கம்..

அண்ணா நூலகத்தை அடுத்து சிக்னலைத் தாண்டி தான் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு இறங்கி நூலகத்தைப் பார்க்கும் ஆவலில் வேகமாக நடந்தோம்.

உண்மையில் இதனை ஒரு ஆசியாவின் அதிசயம் என்று சொன்னால் மிகையில்லை. இந்த நூலகம் தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழன் நிச்சயம் பெருமையடைய வேண்டும்.

சென்னை போன்ற சன நெருக்கடி மிக்க நகரத்தில் விலாசமாகவும் 8 ஏக்கர் பரப்பளவில் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நூலகம் தரைதளத்துடன் 8 மாடிகள் கொண்ட கட்டிடமாக எழுந்து நிற்கின்றமை மூலம் தமிழனின் புலமையை பெருமையை உலகெங்கும் பறைசாற்றுகின்றது.

இப்போது சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இப்படியானதொரு சிறப்பு வாய்ந்த நூலகத்தைத் தான் தமிழக முதலமைச்சர் ஆன ஜெயலலிதா கடந்த 2 ஆம் திகதி நவம்பர் மாதம் 2011 ஆம் ஆண்டு அன்று குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றும் அரசு ஆணை ஒன்றை வெளியிட்டார்.


இதற்கு பல்வேறுபட்ட தரப்புக்களில் இருந்தும் பலத்த எதிர்ப்புக்கள் எழுந்தமை யாவரும் அறிந்ததே.

ஆனாலும் எவ்வித சலனமும் இன்றி அமைதியாக இருக்கிறது இந்த அறிவாலயம்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் உள்ளே நுழைந்ததும் அதன் வெளிப்புற அழகு சென்னை விமான நிலையத்தை விட பிரமிக்கத்தக்க வகையில் அழகாகவும், சுததமாகவும் இருந்தது.

நாங்கள் சென்னையில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் இருந்தது.

"வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைகளுக்கு தரப்பட வேண்டும்" என்று நுழை வாயிலில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் கம்பீரமான சிலைக்கு கீழே எழுதப்பட்டிருந்தது.

மக்களால் போற்றப்பட்ட முன்னாள் தமிழக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணாத்துரையின் நூற்றாண்டு விழாவை ஒட்டி 15 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் 2010 அன்று முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதியால் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நூலகமே இதுவாகும்.


பாதுகாப்பு சோதனைகளைக் கடந்து உள்ளே சென்றால் நீங்கள் இன்னொரு உலகத்தில் இருப்பது போல் உணர்வீர்கள். முதலில் பார்வையற்றோர் படிப்பதற்காக சிறப்பு வசதிகளுடன் கூடிய படிப்பகம் உள்ளது.

அதற்கு அடுத்ததாக வெளியில் இருந்து புத்தகம் கொண்டு வந்து படிப்போருக்கான அறை உள்ளது. அங்கு ஏராளமான மாணவர்கள் படித்துக் கொண்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

இங்கு உள்ள விசேடம் என்னவென்றால் நூலகத்தின் அனைத்தப் பகுதிகளிலும் குளிரூட்டி வசதி செய்யப்பட்டிருந்தது.குளிரூட்டிகள் கொளுத்துகிற சென்னை வெயிலுக்கு இதமாக இருந்தது.

முதல் தளமானது குழந்தைகள் படிப்பதற்கான ரம்மியமான இயற்கைச் சூழலைக் கொண்ட படிப்பகமாக அமைக்கப்பட்டுள்ளது.


"அங்கு தான் நாளிதழ்கள் பிரிவும் அமைந்துள்ளது. இந்தியா மட்டுமல்ல உலகின் பல பாகங்களில் இருந்து வரும் நாளிதழ்களையும் இங்கு படிக்கக் கூடியதாக உள்ளது. ‘நல்ல வெளிச்சம், இதமான குளிர், அற்புதமான மேசை, நாற்காலிகள் என்று வாசிப்பவர்களுக்கான சொர்க்கம் இது. இங்கு வருவோர் எல்லாக் கவலைகளையும் தூர எறிந்து விட்டு இன்னொரு உலகத்தில் சஞ்சரிக்கிறார்கள். அப்படி ஒரு அமைதியும் நிசப்தமும் அங்கே நிலவுகின்றது. இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான வரலாற்று நூல்கள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று பல்வேறு வகையான நூல்களும் காணப்படுகின்றன. கூடுதலாக ஒவ்வொரு புத்தகத்திலும் நான்கு பிரதிகள் காணப்படுகின்றன. புத்தகங்களை எடுத்து அங்கேயே படிக்கலாம், குறிப்பும் எடுத்துக் கொள்ளலாம்.


படித்தவுடன் அங்கேயே வைக்கவும்" என்று படிக்கும் மேசையில் எழுதப்பட்டு உள்ளது. தற்போது ஞாயிற்றுக் கிழமைகளில் சராசரியாக 3000 பேர் வந்து செல்வதாக அங்குள்ள வருகைப் பதிவேட்டில் பதிவாகியுள்ளது. கருணாநிதி எழுதிய புத்தகங்களைத் தவிர எல்லாப் புத்தகங்களும் அங்கே இருக்கின்றன. மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது தளங்களில் ஒவ்வொரு துறைகளுக்குமான புததகங்கள் காணப்படுகின்றன.

ஆங்கிலம், கணிப்பொறி, அறிவியல், தத்துவம், சமூகவியல், உளவியல், மருத்துவம், தொழினுட்பம், விவசாயம், உணவு அறிவியல், மேலாண்மை, இலக்கியம், சுற்றுலா என்று எராளமான துறைகளுக்கான புத்தகங்கள் ஆங்கில மொழியில் இருக்கின்றன.

இங்கு உள்ள ஊழியர்கள் வரும் வாசகர்களிடம் அன்பும், பரிவுடனும் நடந்து கொள்வது நூலகத்துக்கு மேலும் அழகு சேர்க்கின்றது.

50,000 சதுர அடி பரப்பளவில் 1100 பேர் அமரக் கூடிய பெரிய கலையரங்கமும், 800 பேர் அமரக்கூடிய திறந்தவெளி ஒலி-ஒளி அரங்கும் , 151 நபர்கள் அமரும் வசதி கொண்ட கருத்தரங்கு மண்டபமும், 30 பேர் அமரக்கூடிய சிறிய கருத்தரங்க அறையும், நூல் வெளியீட்டு விழா நடத்தக் கூடிய கருத்தரங்க அறைகளும் உள்ளன.

மிகவும் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையும் அமைந்துள்ளது இது சென்னையில் எங்கும் காணாத சிறப்பம்சம்.

பாலவகுப்பு படிக்கும் மாணவனில் இருந்து பேரறிஞர் வரை வந்து செல்லும் அறிவுக்கூடத்தை மூட உத்தரவிட ஜெயலலிதாவுக்கு எப்படி மனது வந்ததோ தெரியவில்லை.

அங்கு பணிபுரியும் பாதுகாப்பு ஊழியருடன் பேசிய போது அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

சிறு வயதிலிருந்து சாகும் வரை தொடர்ந்து படித்தால் கூட இங்குள்ள பாதிப் புததகங்களைக் கூடப் படித்து முடிக்க முடியாது. அப்படியான ஒரு அறிவுச் சொத்தை மூட நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்?

இளைஞர்களாகிய நீங்கள் இந்த நூலகத்தை மாற்றும் முடிவுக்கு எதிராக போராட வேண்டும். எனக்கு இங்கு இல்லாவிடில் வேறு ஒரு இடத்தில் வேலை செய்து விட்டுப் போவேன் ஆனால் நாளைய இளம் சந்ததியின் எதிர்காலம் என்னவாவது... இப்படியாக கவலையுடன் கூறினார் அவர்.

அங்கு சீரியஸாக படித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவனிடம் கருத்துக் கேட்டோம்,

உண்மையில் நினைக்கும் போது கவலையாக இருக்கிறது. முதல்வர் தனது முடிவை மாற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அங்குள்ள மாற்றுத் திறனாளி ஊழியர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

எனக்கு இந்த நூலகம் என்றால் உயிர். ஊழியர் என்பதையும் தாண்டி உண்மையான பற்றுதலோடு வேலை செய்கிறேன். இங்கு பணியாற்றுவதால் உண்மையில் மனதுக்கு நிறைவாக உள்ளது. முதல்வரின் மனதில் நல்லதொரு மாற்றத்தை இறைவன் தான் கொண்டு வர வேண்டும் என்றார்.

புத்தகம் வாங்கி படிக்க முடியாத அடித்தட்டு மக்களின் வரம் தான் இந்த நூலகம். ஏராளமான வறிய நிலையில் உள்ள மாணவர்கள் இந்த நூலகத்தை தக்க முறையில் பயன்படுத்துகிறார்கள்.


"1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மாபெரும் நூலகம் ஒன்று சிங்களர்களால் கொளுத்தப்பட்டது. இதோ தமிழகத்தின் தலைநகரில் தலைநிமிர்ந்து நிற்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஜெயலலிதா அரசால் சிதைக்கப்படுகிறது." இவ்வாறு உணர்ச்சி படக் கருத்துத் தெரிவித்தார் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளரான சு. ப வீரபாண்டியன்.

180 கோடி செலவில் கட்டியிருக்கும் ஒரு கட்டிடம்.. அது முழுக்க, முழுக்க நூலகத்திற்கான வடிவமைப்பில் கட்டப்பட்டது. அதனை எதற்காக மருத்துவமனையாக மாற்ற வேண்டும்..?

மருத்துவமனை வேண்டுமென்றால் புதிதாக ஒன்றைக் கட்டிக் கொள்ளலாமே. ஜெயலலிதா ஒரு முறையாவது நூலகத்தை வந்து பார்க்க வேண்டும். அதன் அருமை பெருமைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


கருணாநிதி திறந்து வைத்தார் என்ற ஒரே காரணத்துக்காக நூலகத்தை மூடி விடுவது என்று சொன்ன ஜெயலலிதாவின் சிறுபிள்ளைத் தனமான முடிவை என்ன வென்று சொல்வது?

கருணாநிதி என்றைக்குமே ஈழத்தமிழர்களின் நிரந்தரத் துரோகி என்பதை மறக்கவுமில்லை, மறைக்கவுமில்லை...

ஆனால்,அண்ணா நூற்றாண்டு நூலகம் நிச்சயமாக கருணாநிதியின் வாழ்நாள் சாதனைகளில் மிக முக்கியமான ஒன்று தான். ஆனால் நூலகத்தை அழிப்பதன் மூலம் கருணாநிதியின் பெயரையும் அழித்து விடலாம் என்று ஜெயலலிதா நினைத்தால் அதைப் போல அடி முட்டாள்தனம் வேறு எங்கும் கிடையாது.
ஒரு நூலகம் திறக்கப்படும்போது 100 சிறைகதவுகள் மூடப்படுகிறது....!!! ஒரு நூலகம் மூடப்படும்போது 1000 சிறைக்கதவுகள் திறக்கப்படும்..!!!