அன்புள்ள
நண்பனுக்கு,
நீயனுப்பிய துண்டு மடல் கிடைத்தது.
மகிழ்ச்சி.
நீ தமிழை மறக்காததையும் நினைத்து.
ஊர் புதினம் கேட்டு எழுதியிருந்தாய்.
பேச்சுவார்த்தை போலவே இங்கு
எதுவுமே நடக்கவில்லை
கொந்தல் மாங்காய் பிடுங்க நாங்கள்
கொக்கத்தடி களவெடுத்த
குமரேசன் பேர்த்தி பிரியாவுக்கு
போன வாரம் கலியாணம்.
கை நிறையக் காசோடு
பறந்து வந்த கனடாக் கணவன்
கொத்திக் கொண்டு போனான்.
வாசிக சாலை‘அமைச்சரவையில்’மாற்றம்
தண்ணீர்ப்ப்பந்தல் போட்ட காசில்
தண்ணி காட்டிப் போட்டார் எண்டு
பேரம்பலத்தாரைத் தூக்கியாச்சு
உனக்காக உன்னுடன் சேர்ந்து
நானும் கலைச்சுத் திரிந்த
பர்வதம் மகள் மைதிலி
இன்னும் காத்திருக்கிறாள்
றெஜீஸ்டர் பண்ணீட்டுப் போன
ஜேர்மன் மாப்பிள்ளை பார்த்து
தூக்குக் காவடியில் தொங்கும் போது
றோட்டோரம் நின்று சிரித்து
சிக்னல் கொடுத்த கலாவையே
எங்கட’புட்போல்’ கண்ணன்
கடைசியில கை பிடிச்சிட்டான்
கனகற்ற வளவுக்கு
சுத்து மதில் அடிச்சதால
எங்கட கிறிக்கெற் கோஷ்டி இப்ப
பள்ளிக்கூட வளவுக்கு
இடம்பெயர்ந்திட்டுது.
வழமை போலவே
வள்ளியரிண்ட வளவு
பங்குப்புளி உலுப்பும் போது
இம்முறையும் நல்ல சண்டை
ஊர் கூடி வேடிக்கை
இரண்டு பேரையும் பொலிஸ்
தூக்கிப் போச்சுது
நாங்கள் ஊமைக் கொட்டையால
எறிஞ்சு கால் முறிச்ச
கிடா மறி எல்லாத்தையும் வித்திட்டு
வடிவக்கான்ர வளவு வாங்கினதோட
இரண்டு மாட்டையும் வாங்கி விட்டிருக்கிறார்
குமார லிங்கத்தார்.
இறைப்புக்கு இஞ்சின் விட்டு
பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த தருமர்
மறைப்புக்கு மதில் கட்டிற அளவுக்கு
ரெண்டு பெடியளையும் சுவிஸுக்கு அனுப்பீட்டார்
முந்திப் பார்த்தா
மூஞ்சியைத் திருப்பிற பத்மா
இப்ப சாதுவா சிரிச்சிட்டுப் போகுது
புருசனோடு போகும் போது.
வேலியே பத்தி விடுமளவுக்கு
வேகிற வெய்யில்
வேறெ என்ன சொல்ல?
அலாரம் வைத்தெழும்பும்
அவதியான நாடெண்டாலும்
அடிக்கடி கடிதம் போடு
நீ வந்து போன சந்தோசம் வருமெனக்கு.
இப்படிக்கு,
இன்னும் இங்குள்ளவன்...
(அருமையான கவிதையைப் படைத்த நண்பனுக்கு நன்றிகள்...)
