என்னுயிர்
பிரியும் வேளையில்
தலைமாட்டிலும்
கால்மாட்டிலும்
நின்றவர்கள்
நீங்கள்தானா?
இமைகளை
மூடிவிட்டது
எந்த விரல்கள்?
நாடிக் கட்டுக்காய்
கிழிக்கப்பட்ட துணி
எவருடையது?
அசுத்தங்கள் நீக்கி
என் பிரேதத்தைக்
குளிப்பாட்டி
கபன் பொதிந்தவர்கள்
யாரெல்லாம்?
வியர்வை சிந்த
எனக்கான
கபர் குழியை
வெட்டியவர்கள் எவர்?
என் ஜனாஸாவைச்
சுமந்து சென்ற
தோள்கள்
எவருடையவை?
என் பிரிவிற்காய்
கண்ணீர் வழிந்த
கன்னங்கள் எத்தனை?
என் வாழ்காலத்தில்
உங்களைக் கடக்க நேர்ந்த
பொழுதுகளில்
உங்களுக்காகப்
புன்னகைத்திருக்கின்றேனா
நான்?
-வி.எஸ்.முஹம்மது அமீன்-
ஆனந்த விகடன்
25.04.2012
No comments:
Post a Comment